வணக்கம்!  வானிலை பற்றிய சில பழமொழிகள் உண்டு. அதில், மாலைநேர செவ்வானம் மாலுமிகளுக்குக் கொண்டாட்டம்; காலைநேர செவ்வானம் மாலுமிகளுக்குத் திண்டாட்டம் போன்ற பழமொழிகள் குறிப்பிடத்தக்கது.

இதன் பொருள்  மாலை நேரங்களில், மேற்கு திசையில் வானத்தின் சிவப்பு நிறத்தின் அடர்த்தி ஓரிரு விஷயங்களைக் குறிக்கும். இளஞ்சிவப்பு நிறமானது தெளிவான வானிலை என்பதையும், அடர் சிவப்பு காற்றில் ஈரப்பதம் சேகரிக்கப்படுவதையும், புயல் அமைப்பு உருவாகிறது  என்பதையும் குறிக்கும்.

 

கிழக்கில் இரவு நேரத்தில் சிகப்பு வானம் என்பது அஸ்தமனமாகும் சூரியனின் ஒளி வளிமண்டலத்தை கடந்து மேகங்களை பிரதிபலிக்கிறது என்று பொருள். மழை ஏற்கனவே கடந்துவிட்டது என்றும் பொருள் கொள்ளலாம்.

தமிழகத்தில் நவம்பர் கடைசி வாரத்திலும் டிசம்பர் முதல் வாரத்திலும் அதிகபட்ச வானிலை நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.

 தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழை அலைகளின் (Easterly waves) தாக்கத்தின் கீழ் உள்ளது,  இன்றும் நாளையும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் கனமழைக்கான வாய்ப்பும் உண்டு.

 

புது தில்லி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஆய்வறிக்கை: அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனுடன் இணைந்த பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வட-மேற்கு திசையில் இலங்கை, கன்னியாகுமரி மற்றும் லட்சத்தீவு நோக்கி படிப்படியாக நகரக்கூடும். இந்த  காற்றழுத்தப் பகுதி தீவிரமடைவதற்கான வாய்ப்பு குறைவே.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய வானிலை அறிவிப்பின்படி நவம்பர் 30 (சனிக்கிழமை) அன்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனுடன் ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் தீவிரமடைந்து மேற்கு-வட-மேற்கு நோக்கி (இலங்கை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து லட்சத்தீவுக்குள்) செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்ளில் கனமழை கொடுக்கும்; கேரளா மற்றும் ராயலசீமா மீது ஆங்காங்கே மழை கொடுக்கும்; மற்றும் தென் கரையோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவில் ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம்.

இந்நிகழ்வினையொட்டி, கீழை அலைகளுடன் இணைந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக மழை எதிர்பார்க்கலாம். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாளை (புதன்கிழமை), கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன

 

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கான கண்ணோட்டம்:

கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம்.

இந்த வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால் சென்னை நகரில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என  தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் மழைப்பொழிவின் அளவு மாநிலம் முழுவதும்  பரவலாக அதிகரிக்கக்கூடும். வடகடலோர ஆந்திராவைத் தவிர,  தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் மற்றும் ராயல்சீமா ஆகிய இடங்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம்.

 

NCEP-GEFS (US National Centres for Environmental Prediction-Global Ensemble Forecast System)-ன் கன்ணோட்டம்:

நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை (வியாழக்கிழமை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம்) தெற்கு தீபகற்பம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கீழை அலைகளினால் அதிக மழைப்பொழிவிற்கான வாய்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது. (படத்தை பார்க்கவும்)

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் விரிவான கண்ணோட்டத்துடன் இதைப் படிக்கலாம்.

26novAM1JPG
 

 

சென்னை: மழைக்கு 20% வாய்ப்பு

இன்று (செவ்வாய்க்கிழமை) பகலில் ஓரளவு மேகமூட்டமான சூழ்நிலை நிலவும் நள்ளிரவுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். காற்று வடகிழக்கு திசையில் இருந்து 15 முதல் 30 கிமீ வேகத்தில் வீசும், பகலில் 20 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது,  இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்பு 30 சதவீதமாக உயரும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும்.

 

 

 

நாளை (புதன்கிழமை) மழைக்கான வாய்ப்பு 40 சதவீதமாக உயரும். மதிய வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்க்லாம், காற்று மணிக்கு 15 முதல் 30 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசும்.

 

புதுச்சேரி: மழைக்கு 50% வாய்ப்பு

 

ஓரளவு மேகமூட்டமான காலை, பிற்பகலில் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழைப்பொழிவு இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். மணிக்கு 30 முதல் 50 கி.மீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும். இரவில் மழைக்கான வாய்ப்பு 80 சதவீதமாக உயரும்.

 

சேலம்: மழைக்கு 10% வாய்ப்பு

அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவே. மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் கிழக்கு-வடக்கு-கீழைக்காற்றுடன் ஓரளவு மேகமூட்டமான நாள்.

 

கோவை: மழைக்கு 10% வாய்ப்பு

வறண்ட வானிலையே நிலவும். ஒரே ஆறுதல் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்காது. மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். 20 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

 

 

திருச்சிராப்பள்ளி: மழைக்கு 20% வாய்ப்பு

31 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச நாள் வெப்பநிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 15- முதல் 30 கி.மீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும். இரவு வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும். மணிக்கு 10- முதல் 15 கிமீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும்.

 

மதுரை: மழைக்கு 20% வாய்ப்பு

வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும், மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாக இருக்கும். இரவு நேரங்களில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் வடக்கு கீழைக்காற்று வீசும்.

 

தூத்துக்குடி: மழைக்கு 40% வாய்ப்பு

நேற்று (திங்கட்கிழமை) போலவே, மழை வாய்ப்பு 40 சதவிகிதம். கீழைக்காற்றலைகளின் வீச்சு தென் தமிழகத்திற்க்கு அனுகூலமாக இருப்பதே இதற்கு காரணம். மணிக்கு 15- முதல் 30 கி.மீ வேகத்தில் வடக்கு-கீழைக்காற்று வீசும். அவ்வப்போது மழை எதிர்பார்க்கலாம். வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இரவு நேரத்தில் மேகமூட்டம் அதிகரிக்கும். மணிக்கு 15- முதல் 25 கி.மீ வேகத்தில் வடக்கு கீழைக்காற்று வீசக்கூடும்.

 

  மொழிபெயர்ப்பு: ஸ்ரீகிருஷ்ணன்

comment COMMENT NOW