சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 2

Vinson Kurian Updated - December 02, 2019 at 01:11 PM.

கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

The skies were gray over the Chennai Port Trust this morning. Photo: Bijoy Ghosh

வணக்கம் வாசகர்களே!, நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வசனம் போல வடகிழக்கு பருவமழை நிகழ்வுகள் தாமதமாக இருந்தாலும், புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு நல்ல மழை கொடுத்திருக்கிறது. இன்று (திங்கட்கிழமை) காலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வானிலை நிகழ்வுகள் சற்றே  அமைதியாகிவிட்டது.

அதே வேளையில் இரண்டு வலிமை குறைந்த காற்றழுத்தப் பகுதிகள் தென்கிழக்கு அரபிக் கடலுக்கு அருகிலும், தொலைவில் (ஆப்பிரிக்க கடற்கரைக்கு அருகிலும்) ) -- கிட்டத்தட்ட ஒரு நேர் கோட்டில் -- தென்மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளன.

பொதுவாக, ஒரே பருவமழை முறைமையில் இயங்கும் இதுபோன்ற இரண்டு வானிலை அமைப்புகள் குறைந்த காலம் மட்டுமே நீடிக்கும், ஆனால் தென்கிழக்கு அரபிக் கடலுக்கு அருகில் நிலைக்கும் காற்றழுத்தப்பகுதி மேற்கு-வட-மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு-மத்திய அரபிக்கடலை நோக்கி பயணிப்பதால், இது மேலும் தீவிரம் அடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. எது எப்படியிருந்தாலும், இந்த நிகழ்வினால் வடகிழக்கு பருவமழை பயனடையும், இருப்பினும் தென் தீபகற்பத்தில் மழை அளவு குறையக்கூடும். ஏனெனில், கடற்கரையிலிருந்து தொலைவில் காற்றழுத்தப்பகுதி அமைந்திருப்பதால், மழைப்பாதை தென்கிழக்கிலிருந்து வடகிழக்காக  (தென் தமிழ்நாடு உள்மாவட்டங்கள் மற்றும் மத்திய மற்றும் வடக்கு கேரளா) மாறக்கூடும்.

இன்று (திங்கட்கிழமை) காலை இந்திய வானிலை மையத்தின் அறிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனுடன் இணைந்த பூமத்தியரேகை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி, நன்கமைந்த காற்றழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது. மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதேபோல், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலுக்கு அருகில் உள்ள காற்றழுத்தப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, நாளைக்குள் தாழ்வு மண்டலமாக மாறும்.

கீழை அலை (Easterly waves) தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமான மற்றும் மிக அதிக மழையும் கொடுக்கும் மற்றும் நாளை வரை கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை), காலையில் மழைக்கிடையில் சிறிது நேரம் வெயில் பிறகு, பிற்பகல் 3.30 மணியிலிருந்து சென்னையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் பலத்த மழை பெய்த்து. ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீகாளஹஸ்தி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, திருத்தனி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், ராமாபுரம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அடர்த்தியான மேகங்கள் மழையை பொழிந்தன.

மாலை 5.30 மணியளவில், மழை மேகங்கள் போர்க்கப்பல் போல கடலில் வரிசையாக நின்று, இரவு 7.35 மணியளவில் தென்கிழக்கில் இருந்து ராமபுரம் மற்றும் சென்னையை சூழ்ந்து கனமழை கொடுத்தது, வடக்கில் ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி, மற்றும் கூடூர் பகுதிகளிலும் கனமழை பெய்த்து. தமிழகத்தின் தெற்கு உள் மாவட்டங்கள், கும்பகோணம், சேலம், தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மாநகரத்தின் மீதான இரண்டாவது மழைத்தாக்குதல் இரவு 8.15 மணியளவில் தொடங்கியது, ஸ்ரீ சிட்டி, திருப்பதி, கோடுரு, ராபூர் மற்றும் மற்றும் ராஜம்பேட்டை ஆகிய இடங்கள் இடியுடன் கூடிய மழையால் தொடர்ந்து தாக்கப்பட்டன. இரவு 9.50 மணியளவில், சென்னையில் வானம் தெளிவாக காணப்பட்டது.

அதே நேரம் ஆந்திராவின் கிருஷ்ணபட்டணம், பொடலக்கூர் மற்றும் நெல்லூரை மழை மேகங்கள் தாக்கத் தொடங்கியது. மழை சேதங்கள் திங்களன்று பெய்த மழையால் மேட்டுப்பாளையத்தில் நான்கு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் பதிவு செய்தது.    சென்னையில், சனிக்கிழமை இரவு அம்பத்தூரில் 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்செயலாக மழை நீர் வடிகாலில் விழுந்து இறந்தார்.   

இதற்கிடையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை சங்கராபராணி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வீடூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவிருந்ததால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  32 அடி முழு கொள்ளளவில் அணையின் நீர்மட்டம் 30.8 அடியை எட்டியுள்ளது மற்றும் டிசம்பர் 2 (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என்று தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை: மேகமூட்டம், 20% முதல் 50% வரை மழை பெய்ய வாய்ப்பு திங்கட்கிழமை காலை சென்னையில் காற்றின் திசை கிழக்கு-தென்கிழக்காக மாற்றமடைந்துள்ளது, ஈரப்பதம் 100 சதவிகிதம் மற்றும் வானம் மேகமூட்டமாக இருக்கும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடுகையில் இன்று குறைவான வானிலை நிகழ்வுகளே நாளாக இருக்கும் என சர்வதேச மாதிரிகள் கணித்துள்ளன. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மேகமூட்டமான வானிலை நிலவும், 20 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் வடகிழக்கில் இருந்து காற்று வீசும். சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA / VOMM) காலை 8 மணி நிலவரம்: மூடுபனி, வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ். விமானங்கள் புறப்படுவதில் சராசரியாக 14 நிமிட தாமதம் இருந்தபோதிலும் வருகை அட்டவணைப்படி இருந்தது. மற்ற நகரங்களைப் பொருத்தவரை, புதுச்சேரியில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது; சேலம் மற்றும் கோவையில் மேகமூட்டம் மற்றும் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு; திருச்சிராப்பள்ளியில் ஓரளவு மேகமூட்ட்த்துடன் மழைக்கு 90 சதவீத வாய்ப்புள்ளது; மதுரையில் பெரும்பாலும் மேகமூட்டம் மற்றும் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது; தூத்துக்குடியில் பகலில் 80 சதவீத மழை வாய்ப்பும் இது இரவில் 90 சதவீதமாக உயரும்.

தமிழ்நாட்டில் பெய்த மழையைப் பற்றி சென்னையின் வானிலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர் பதிவுகள்

Published on December 2, 2019 05:43