பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலை நொறுங்கியதால் திங்களன்று 5.8 பில்லியன் டாலர் நிகர மதிப்பை இழந்த நிலையில், முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை அலிபாபா நிறுவனர் ஜாக் மாவிடம் இழந்துள்ளார். கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 டாலருக்கு கீழ் குறைந்துவிட்டதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலையும் குறைந்தது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாக் மாவின் நிகர மதிப்பு 44.8 பில்லியன் டாலராக உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் பணக்காரரான அம்பானியின் சொத்து 41.8 பில்லியன் டாலராக உள்ளது.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் திங்களன்று 5.6 பில்லியன் டாலர்களை இழந்த போதிலும் உலகின் பெரிய பணக்காரராகத் தொடர்கிறார்.

உலகளாவிய பங்குச் சந்தைகள் திங்களன்று மிகவும் ஆட்டம் கண்டன. இந்தியாவில், சென்செக்ஸ் திங்களன்று பிற்பகல் 2,326.35 புள்ளிகள் வீழ்ந்தது.

நிஃப்டியும், டிசம்பர் 2018 க்குப் பிறகு முதல் முறையாக 10,500 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. வெறும் 36 வர்த்தக நாட்களில், சென்செக்ஸ் ஜனவரி 20 அன்று 52 வார உயர்வான 42,273.87 புள்ளியிலிருந்து 52 வார குறைந்த 35,109.18 ஐ மார்ச் 9 அன்று எட்டியுள்ளது. இது 17 சதவீதம் வீழ்ச்சியாகும்.

வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகள்

ஒரே இரவில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் 30 சதவிகித சரிவு மற்றும் கொரோனா வைரஸ் பற்றி மோசமான செய்திகள் ஆகியவை உலக பங்குச் சந்தை வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள இரண்டு காரணிகளாகும், இது திங்களன்று அம்பானியின் நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களைத் துடைத்தெறிந்தது.

இதன் மூலம், 2018 ஆம் ஆண்டின் நடுவில் ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற அந்தஸ்தை இழந்த ஜாக் மா முதலிடத்தைப் பிடித்தார். அவர் மீண்டும் 44.5 பில்லியன் டாலர் செல்வத்துடன், அம்பானியை விட சுமார் 2.6 பில்லியன் டாலர் அதிகமாக பெற்றுள்ளார்.

கச்சா எண்ணெய் வீழ்ச்சியினால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் பங்குகள் 13 சதவீதம் சரிந்தது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த வீழ்ச்சியாகும்.

comment COMMENT NOW